தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4–வது நாளாக விசாரணை

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4–வது நாளாக விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4–வது நாளாக விசாரணை நடத்தினர்.
கலவரம்தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். 13 பேர் உயிர் இழந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஆவணங்கள் சேகரிப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் ஏராளமான தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
4–வது நாளாக...அதன் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள், காயம் அடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 4–வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் சாட்சிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகளின் வாக்குமூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்கள், காயம் அடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைத்து சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.