அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி செந்தில்நாதன் எம்.பி. பங்கேற்பு


அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி செந்தில்நாதன் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 9:19 PM GMT)

அரிமளம் ஒன்றியத்தில் நடந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியில் செந்தில்நாதன் எம்.பி. பங்கேற்றார்.

அரிமளம்,

அரிமளம் ஒன்றியத்தில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான வைரமுத்து ஆகியோர் நேற்று காலை முதல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த னர்.

கடியாப்பட்டி ஊராட்சியில் தொடங்கி கடையக்குடி, கண்ணங்காரக்குடி, செங்கீரை, ராயவரம், ஆயிங்குடி, கே.செட்டிப்பட்டி, மேல்நிலைவயல், நெடுங்குடி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர், கே.ராயவரம், நம்பூரணிப்பட்டி, வம்பரம்பட்டி, போசம்பட்டி உள்பட 27 ஊராட்சிகளிலும் மற்றும் அரிமளம் பேரூராட்சி பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, உயர்மின் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பது, முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, வரத்துவாரிகளை தூர்வாருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திலகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரன், அரிமளம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கணேசன், செங்கீரை சாத்தையாகருப்பையா, மாவட்ட பிரதிநிதி மணிமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், கே.புதுப்பட்டி முருகன், கடியாப்படி மோகன், கே.புதுப்பட்டி பழனி, தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன், ஊராட்சி, கிளை, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், பொதுபணித்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story