கோவில் பிரசாதம் சாப்பிட்ட 63 பேருக்கு வாந்தி-பேதி 33 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி


கோவில் பிரசாதம் சாப்பிட்ட 63 பேருக்கு வாந்தி-பேதி 33 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 2 July 2018 11:41 PM GMT (Updated: 2 July 2018 11:41 PM GMT)

நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 63 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது. இவர்களில் 33 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்னிலம்,

திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அதம்பார் கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து ஓராண்டு நிறைவு நாள் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் உள்பட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென்று அந்த கிராமத்தை சேர்ந்த 63 பேருக்கு திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவர்களுக்கு வாந்தி-பேதி மேலும் தொடர்ந்ததால் 33 பேர் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

அகிலாண்டேஸ்வரி(வயது 33), மாரிமுத்து(18), நிஷா(17), அபிராமி(19), மீனாட்சி(31), சிவராமன்(15), தமிழ்மாது(13), சஞ்சை(9), சத்யா(10), ஆகாஷ்(10), சரஸ்வதி(40), கணேஷ்(31), சுலோச்சனா(51), நீலாவதி(35), கவிதா(35), பிரபா(15), பிரவீணா(14), சுரேஷ்(22), விஜயபாலன்(30), தர்ஷா(13), ஷோபனா(13), கலியமூர்த்தி(44), ராஜாமணி(45), வனிதா(54), சுசீலா(28), சரண்யா(24), சூர்யா(9), அருண்குமார்(13), மகேந்திரன்(22), ஹேமலதா(18), செல்வகுமார்(14), சிவா(12), மணிகண்டன்(35).

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் பரஞ்ஜோதி, சுகாதார இணை இயக்குநர் உமா, துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். மேலும் அதம்பார் கிராமத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன்(பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாந்தி-பேதிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கும்பாபிஷேக நிறைவு விழாவில் வழங்கப்பட்ட சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக தெரிய வந்தது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 63 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story