மூடப்பட்ட கடையில் சாராயம் விற்பனை போலீஸ் சோதனையில் ஒருவர் சிக்கினார்


மூடப்பட்ட கடையில் சாராயம் விற்பனை போலீஸ் சோதனையில் ஒருவர் சிக்கினார்
x
தினத்தந்தி 4 July 2018 10:30 PM GMT (Updated: 4 July 2018 10:06 PM GMT)

திருக்கனூர் பகுதியில் மூடப்பட்ட சாராயக்கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருக்கனூர்,

புதுவை, காரைக்காலில் உள்ள சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்கான உரிமம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையொட்டி கடந்த மாதம் 19 மற்றும் 20-ந் தேதிகளில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு ஆன்லைன் மூலம் கலால்துறை அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

இதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கவர்னர் கிரண் பெடியிடம் சாராயக்கடை வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்கனவே ஏலம் விடப்பட்ட கடைகளுக்கான ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 30-ந் தேதியுடன் உரிமம் முடிவடைந்ததால், கடந்த 1-ந் தேதி முதல் சாராய கடைகள், கள்ளுக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது. இதை தடுக்க கலால்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சாராய பாக்கெட்டுகள் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளில் சோதனை நடத்த மேற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், குமராப்பாளையம் ஆகிய பகுதிகளில் மூடப்பட்டுள்ள சாராயக்கடைகளை திறந்து திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குமராப்பாளையம் கடையில் விற்பனைக்காக 10 லிட்டர் சாராயம், 79 குவாட்டர் பாட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாராயக்கடையில் விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் வி.நெற்குணம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் புதுவை கலால்துறையில் ஒப்படைக் கப்பட்டது.

திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் திருக்கனூர், சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு, வாதானூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு ஆகிய கிராமங்களில் மூடப்பட்ட சாராயக்கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது எந்த கடைகளிலும் சாராயம் விற்பனை செய்யப்படவில்லை. 

Next Story