‘பகவான்’கள் தேவை


‘பகவான்’கள் தேவை
x
தினத்தந்தி 8 July 2018 8:22 AM GMT (Updated: 8 July 2018 8:22 AM GMT)

ஆசிரியர்கள் சமுதாய சிற்பிகள். என்ஜினீயர், டாக்டர், கட்டிடக்கலை நிபுணர், பட்டய கணக்காளர் என பல்வேறு துறை நிபுணர்களையும் உருவாக்கும் பிரம்மாக்கள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முன்னால் ஆசிரியர்களை வைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இடத்தை வழங்கி இருக்கிறோம்.

நல்ல விதைதான் நல்ல மரமாகும்; நல்ல மரம்தான் சுவையான சிறந்த கனியை தரும். அதுபோல மாணவ சமுதாயத்தை மிகச்சிறந்த மனித சமுதாயமாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.

ஆசிரியர் பணி ஊதியம் வாங்கும் பணி என்றாலும், அதை தன்னலமற்ற சேவையாக கருதி அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபடும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மகத்தான ஆசிரியர்தான் பகவான்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், ஒரே நாளில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி, மக்களின் மனதில் இமயமாக உயர்ந்து விட்டார்.

ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகே அருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. கல்விப்பணியில் இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், வெளியகரம் பள்ளி மாணவ-மாணவிகள் அவரை சூழ்ந்துகொண்டு தங்களை விட்டு போகக்கூடாது என்று கூறி கட்டிப்பிடித்து கதறி அழுததும், அந்த அன்பின் சுமையை தாங்க முடியாமல் பகவானும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்தியதும் இதுவரை எங்கும் நடக்காத ஒரு சம்பவம். ஆசிரியர்-மாணவர்கள் இடையேயான பரஸ்பர அன்பையும், பற்றுதலையும், அக்கறையையும் பறைசாற்றிய நெகிழ்ச்சியான தருணமாக இது அமைந்தது.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் ஒட்டுமொத்த இந்தியாவே பகவானை நோக்கி திரும்பியது. பிரபல இசைஅமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகர் விவேக் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர் பகவானுக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மாணவர்கள்-பெற்றோரின் வற்புறுத்தலை தொடர்ந்து ஆசிரியர் பகவானின் இடமாறுதலை கல்வித்துறை ரத்து செய்து, அந்த பள்ளியிலேயே பணியாற்ற அனுமதித்து இருக்கிறது.

ஆசிரியர்-மாணவர் உறவு பாடபுத்தகத்தோடு நின்றுவிடுவது இல்லை; அதற்கு மேலும் உள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் ஆசிரியர் பகவான்.

ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியராக மட்டும் அல்லாமல் ஒரு சகோதரனாக இருந்து தாயினும் சாலப்பரிந்து அவர்களுக்கு கல்வியை போதிக்கிறார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார்.

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பொம்மராஜுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பகவானின் தந்தை கோவிந்தராஜ் நெசவுத் தொழிலாளி. தாயார் தெய்வானை ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். பகவானின் அண்ணன் ராஜேஷ் பெங்களூருவில் பிளம்பராக வேலை பார்க்கிறார். தம்பி யோகராஜ் எம்.ஏ. படித்து வருகிறார். சகோதரி சுதா திருமணம் முடிந்து அம்மபள்ளியில் கணவருடன் வசித்து வருகிறார்.

மாணவர்களுக்கும் தனக்கும் இடையேயான உறவை ஆசிரியர் பகவான் பகிர்ந்து கொண்டார்... அவர் கூறியதாவது:-

சாதாரணமாக ஆசிரியர் என்பவர் உயர்ந்த இடத்தில் இருப்பவர் போலவும், மாணவர்கள் அவரை தூரத்தில் இருந்து பார்த்து பேச வேண்டும் என்பது போன்ற முறையை நான் கடைபிடிக்கவில்லை. இங்கு படிக்க வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.

ஆங்கிலம் என்பது கற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமான மொழி என்ற எண்ணத்தை நாம் மாற்றவேண்டும். இதற்காக வகுப்பறையில் நான் புத்தகத்தை கையில் எடுத்து பாடம் நடத்தாமல் அன்றைக்கு நடத்த இருக்கும் பாடத்தை கதை சொல்வது போல் கூறி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவேன். மாணவர்களுக்குள் சிறு சிறு குழுக்களை அமைத்து சந்தேகங்களை அவர்களே கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வகை செய்தேன். அந்த குழுக்கள் இடையே வினாடி-வினா போட்டி நடத்தி அவர்களை ஊக்குவித்தேன்.

மாணவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் நான் ஒரு நண்பனைப்போல்-சகோதரனைப்போல் அவர்களுடன் பழகுகிறேன். அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதோடு, உணவையும் நாங்கள் பரிமாறிக் கொள்வது உண்டு. தவறு செய்யும் மாணவர்களை பலர் முன்னிலையில் தண்டிக்காமல், அவர்களை தனிமையில் அழைத்து அறிவுரை வழங்குவேன்.

என்னுடைய இந்த அணுகுமுறையால்தான் மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்ததாக கருதுகிறேன். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை கடமையாக மட்டும் கருதாமல், அவர்களுடைய நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

இவ்வாறு கூறிய பகவானின் வார்த்தைகளில், மாணவ சமுதாயத்தின் மீதான ஈடுபாடும் அக்கறையும் வெளிப்பட்டது.

நாட்டில் இப்படி எத்தனையோ ‘பகவான்’கள் இருக்கிறார்கள். அவர்கள் வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள். இன்னும் நிறைய ‘பகவான்’கள் உருவாக வேண்டும்.

ஆசிரியர்கள் எல்லோருமே ‘பகவான்’களாக வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை. 

அண்ணனான ஆசிரியர்

தேனி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயராஜை மாணவ-மாணவிகள் யாரும் ‘சார்’ என்றோ, ‘ஐயா’ என்றோ அழைப்பது இல்லை. வாய் நிறைய ‘அண்ணா... அண்ணா...’ என்றே அழைக்கின்றனர்.

புத்தகத்துக்கு வெளியிலும் கல்வி இருக்கிறது என்பதை உணர்த்தி, கல்வியோடு இணைந்து பல கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

வகுப்பறைக்குள் மாணவ-மாணவிகள் குழுவாக சேர்ந்து பாடம் படித்தல், கலந்துரையாடலுக்காக சிறிய மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. அமர்வதற்காக சிறு, சிறு பஞ்சு மெத்தை இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பஞ்சு மெத்தை இருக்கையில் அமர்ந்துகொண்டு மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். எளிமையாகவும், பாடங்களை புரிந்தும் படிக்கும் வகையிலும் கற்றல் அட்டைகள், கல்வி உபகரணங்கள் போன்றவை புதிது, புதிதாய் உருவாக்கப்பட்டு வகுப்பறை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

பள்ளியில் மாணவ நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு, சுகாதாரத்துறை, கல்வித்துறை, பண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை என 4 துறை அமைச்சர்களாக மாணவ, மாணவிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களை கடந்து கதை சொல்லுதல், பொம்மலாட்டம், நாடகம் நடித்தல், பள்ளிச்சுவரில் ஓவியம் வரைதல் என தனித்திறமைகளிலும் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.

ஆசிரியர் விஜயராஜ் கூறியதாவது:-

எனது மனைவி கோவிந்தம்மாள் மின்வாரிய ஊழியராக வேலை பார்க்கிறார். பூர்வபூஜிதன், நிகரமைவன் என இரு மகன்கள். பூர்வபூஜிதன் 3-ம் வகுப்பும், நிகரமைவன் 1-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

நான் வேலை பார்க்கும் பள்ளியிலேயே மகன்களை சேர்க்க வேண்டும் என்று சொன்ன போது முதலில் எனது மனைவி சம்மதிக்கவில்லை. இருவரும் சம்பாதிப்பதால் தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம் என்றார். பின்னர், என் மீதுள்ள நம்பிக்கையில் சம்மதித்தார்.

ஆசிரியரை மையப்படுத்திய கற்றலை விட மாணவர்களை மையப்படுத்திய கற்றல் தான் சரியாய் வரும் என்பதால், மாணவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு வகுப்பறையில் உற்சாகம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன். உழைப்பு என்றைக்கும் வீண் போகாது. தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது 23 பேர் படிக்கின்றனர். இந்த ஆண்டு 11 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் பிற பள்ளிகளில் இருந்து விலகி, இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘அம்மா’வான தலைமை ஆசிரியை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கிறது கோ.ஆதனூர் கிராமம். மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்தில், ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தை வண்ணமயமாக்கி, பல ஓவியங்களை தனது சொந்த செலவிலேயே செய்து இருக்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி.

இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த வீரட்டிக்குப்பம் அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக ஏற்கனவே மாற்றி காட்டியிருந்தார்.

பெயருக்கு ஏற்றார்போல தமிழ்வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள எழுத்தாளர். அதனால்தான் என்னவோ தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கான விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் விருது, கலைஞர் பொற்கிழி விருது, மும்பையில் உள்ள ஸ்பேரோ நிறுவனத்தின் விருது என்று எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

தனியார் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவர்கள் கூட தற்போது கோ.ஆதனூர் பள்ளியில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து, இந்த பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் பலர். பணியை ராஜினாமா செய்த பிறகும் மாணவர்கள், பெற்றோர்களின் நெகிழ்ச்சிப் போராட்டத்தால், தன் பணியை மீண்டும் தொடர்கிறார் தமிழ்செல்வி.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்ச்செல்வியை அம்மா என்றே செல்லமாக அழைக்கிறார்கள். இதற்கு மாணவர்கள் மீது இவர் காட்டும் பரிவும், அக்கறையும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

பள்ளியை சொந்த செலவில் மேம்படுத்துதல், மாணவர்கள் மீது அன்பு காட்டுதல் என்று அனைத்திலும் அக்கறை காட்டும் தமிழ்ச்செல்வி தனது ஆசிரியர் பணி பற்றி கூறியதாவது:-

2015-ம் ஆண்டு முதல் கோ.ஆதனூர் பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இந்த பள்ளிக்கூடத்திற்கு நான் வந்த போது ஒரு பள்ளிக்கூடம் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ? அதனை போன்று இருந்தது. மழைபெய்தால் குட்டையின் நடுவில் உள்ள ஒரு பள்ளியை போன்று, பள்ளிக்கூடத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கும். மழைநின்றாலும் பள்ளியை திறப்பதற்கு 3, 4 நாட்கள் ஆகும்.

என் சொந்த செலவிலும், நண்பர்களின் உதவியுடனும், ஊர் முக்கிய பிரமுகர்களின் அன்பளிப்பாலும் தாழ்வான பகுதிகளை மேடாக்கினேன். பள்ளிக்கூடத்திற்கு வரும் சாலை சேறும், சகதியுமாக இருக்கும். அந்த சாலையை மேம்படுத்த பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது.

இன்று வகுப்பறை சுவர்கள் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. பீரோ, கணினி, அச்சு எந்திரங்கள், மேஜை, நாற்காலிகள் என தனியார் பள்ளிக்கூடத்திற்கு இணையான அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம்.

மாணவர்கள் என்னை அம்மா என்று அழைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அளவிற்கு மாணவர்களை நான் நேசிக்கின்றேன். மாணவர்கள் என்னை நேசிக்கின்றனர். மாணவர்களை வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாற்றி புதிய அணுகுமுறையில் அணுகும்போது மாணவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்.

நான் ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போது, விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் என் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். நான் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என தெரிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் என்னை மீண்டும் பணியில் சேரச்சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். அப்போது மாணவர்களை நான் சந்தித்தப்போது என்னை, ‘அம்மா’ என்று ஓடி வந்து கட்டி அழுதனர். அந்த தருணத்தில் உணர்ச்சிகளை மீறி நானும் குழந்தைகளுடன் அழுதுவிட்டேன். அவர்களுக்காகவே மீண்டும் பணியில் சேர்ந்தேன்.

பள்ளியில் படிப்புக்கு முக்கியத்துவம் தருவதை போல கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுடன் முக்கிய செய்திகள், நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு அறியப்படுத்துகிறோம். தினந்தோறும் நடைபெறும் வழிபாட்டு கூடங்களில் தமிழர் தொன்மம், வீரம், மன்னர்களின் வரலாறு ஆகிய கதைகளை சொல்லும் போது மாணவர்களை எளிதில் கவரமுடியும்.

ஒரு மாணவருக்கு பிறந்தநாள் என்றால் எங்கள் பள்ளியில் வரைந்துள்ள பிறந்தநாள் கேக் படத்தில் அந்த மாணவரின் பெயரையும், பெற்றோர் பெயரையும் எழுதி அந்த மாணவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் வாழ்த்து கூறுவார்கள். இவையெல்லாம் மாணவர்களுக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் எங்கள் பள்ளியில் கிடைக்கும். அதனால் மாணவர்கள் விடுமுறை எடுக்காமலும், இடைநிற்றல் இல்லாமலும் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர்.

இந்த வருடம் மட்டும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை பார்த்து, 12 தனியார் பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்நிகழ்வில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பங்கேற்றார்.

மேற்கண்டவாறு ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறினார்.

பணியிட மாறுதல் பெறாத தலைமை ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.ஆர்தர் (வயது 49). திண்டுக்கல் கோபால்நகரில் வசிக்கும் இவர். தினமும் 27 கி.மீ. தூரம் பயணம் செய்து பள்ளிக்கு செல்கிறார். கடந்த 9 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

அவர் விவரித்து கூறியதாவது:-

நான் கடந்த 1995-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியை தொடங்கினேன். கடந்த 2005-ம் ஆண்டு நிலக்கோட்டை அவையம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனேன். இதையடுத்து 2010-ம் ஆண்டு அம்மையநாயக்கனூர் பள்ளிக்கு வந்தேன்.

எங்கள் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்துகிறோம். தனியார் பள்ளிகளை விட எங்கள் மாணவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பித்தலில் சிறப்பு கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கவனம் செலுத்துவோம். வாசித்தல், எழுதுதலில் கூடுதல் கவனமாக இருப்போம். மேலும் ஆங்கிலத்தில் கடினமாக சொற்களை தமிழ் விளக்கத்துடன் அச்சடித்து கொடுத்துள்ளோம்.

தனியார் பள்ளிகளை போன்று எங்கள் பள்ளி மாணவர்களும் டை, பெல்ட் அணிந்து மிடுக்காக வருவார்கள். அதுவும் பெற்றோரை கவர்ந்து விடுகிறது. மேலும் மாணவர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம், பேச்சு என பயிற்சி அளிக்கிறோம். இதனால் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பரிசுகளை குவித்துள்ளனர்.

மாணவர்கள் அன்றாட விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ரெயில் நிலையம், தபால் நிலையம், வங்கிகளுக்கு அழைத்து சென்று அங்கு என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று விளக்குவோம். மேலும் ரெயில் டிக்கெட் எடுத்தல், சேமிப்பு கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் பற்றி கற்றுக்கொடுக்கிறோம். ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று ஊராட்சி தலைவரின் பணிகள், பொதுமக்களின் உரிமைகள் குறித்து சொல்லி கொடுக்கிறோம்.

நான் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றபோது, இந்த பள்ளியின் நிலைமை மிகவும் சாதாரணமாக இருந்தது. பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதோடு, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் தனிக்கவனம் செலுத்துகிறோம். இதற்கு எனது சக ஆசிரியைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் சாதாரண கிராமத்தை சேர்ந்தவன். எனவே, கிராமமக்கள் அனைவரிடமும் பழகி நன்கு அறிமுகமாகி விட்டேன். இதனால் மாணவர்கள் நலனில் தானாகவே அக்கறை அதிகமாகி விட்டது. மேலும் ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து அதில் ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர் அனைவரையும் இணைத்துள்ளேன்.

இதன் மூலம் மாணவர்களின் பிறந்தநாள், கல்வி மற்றும் விளையாட்டு உள்பட எந்த பிரிவில் சாதனை படைத்தாலும் வாழ்த்துகளை பதிவு செய்வோம். இதனை பெற்றோர் அனைவரும் பார்த்து விடுவார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருப்பதோடு, வெளிப்படை தன்மையை உணர்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் உரிமையுடன் எங்களிடம் பழகுகிறார்கள். நல்ல மதிப்பும், மரியாதையையும் அளிக்கிறார்கள்.

அதோடு நான் உள்பட எந்த ஆசிரியைகளும் வேறு ஊருக்கு பணி மாறுதலில் செல்லக்கூடாது என்று அன்பு கட்டளையிட்டு இருக்கிறார்கள். எனவே, நானும் ஆசிரியைகளும் பணியிட மாறுதலில் செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

மேற்கண்டவாறு தலைமை ஆசிரியர் ஆர்தர் கூறினார்.

பள்ளிக்காக ரூ.7 லட்சம் செலவு செய்த தலைமை ஆசிரியர்

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சவால் விடும் வகையில் அரசு நடுநிலைப்பள்ளியை தனி ஒருவராக நின்று போராடி வளர்ச்சியடைய வைத்துள்ளார் தலைமை ஆசிரியர் இளங்கோவன்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியனில் கரிவலம்வந்தநல்லூரை கடந்து விருதுநகர் மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ளது பெருமாள்பட்டி கிராமம். இங்கு 1941-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் நடுநிலைப்பள்ளிக்கூடமாக உயர்த்தப்பட்டது.

இங்கு தலைமை ஆசிரியராக இளங்கோவன் பொறுப்பேற்றப்பின் இந்த பள்ளிக்கூடம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. 2016-17-ம் கல்வி ஆண்டில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் விருது பெற்று உள்ளார்.

தலைமை ஆசிரியர் இளங்கோவன் இந்த பள்ளியை தனது சொந்த பள்ளிக்கூடமாக கருதி, தனது சொந்த நிதியில் ரூ.7 லட்சம் வரை செலவு செய்து பள்ளிக்கூடத்தை அழகுற மாற்றி உள்ளார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இவர் பள்ளிக்கூட வளர்ச்சிக்கும், மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகளையும், நடைமுறை மாற்றங்களையும் செய்து பெற்றோர் வியக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். அதாவது மாணவ-மாணவிகள் சரியாக காலை 8.30 மணிக்குள் பள்ளிக்கூடத்துக்குள் வந்து விட வேண்டும். அதே போல் ஆசிரியர்களும் 8.30 மணிக்குள் உள்ளே வந்து விட வேண்டும். அவர்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்போனை சைலைன்ட் மோடில் தலைமை ஆசிரியர் மேஜையில் உள்ள டப்பாவில் போட்டு விட்டு வகுப்பறைகளுக்கு சென்று விடுகின்றனர்.

குழந்தைகள் தின்பண்டங்கள், நொறுக்கு தீனிகளை பள்ளிக்கூடத்துக்குள் கொண்டு வரக்கூடாது. ஆனால் மாலை 4.10 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து செல்லும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு பிஸ்கெட்டை ஆசிரிய, ஆசிரியைகள் வழங்குகின்றனர். சத்துணவு கூடத்தில் தண்ணீரை சுட வைத்து வகுப்பறை தோறும் வழங்குகின்றனர். இதுதவிர மாதம் ஒரு முறை டாக்டரை அழைத்து வந்து மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

இது தவிர ஒரு வகுப்பறையை “ஸ்மார்ட் வகுப்பறையாக” மாற்றம் செய்து உள்ளார். புரஜெக்டர் கருவி மற்றும் தொடுதிரையும் அந்த வகுப்பறையில் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் இந்த பள்ளிக்கூட வளாகத்தில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார். ஆசிரியர்கள் பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு சொந்தமாக நிதி செலவு செய்வதை கண்ட ஊர் மக்கள் ஆர்வத்துடன் தாங்களும் பணம் சேகரித்து சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு உதவி செய்து உள்ளனர். கழிப்பறையில் நாப்கின் எரியூட்டியும் பொருத்தப்பட்டு உள்ளது. இளம்பருவ மாணவிகள் நாப்கினை எரிப்பதற்கு ஆசிரியைகள் வழிகாட்டவும் செய்து உள்ளார். பள்ளிக்கூடத்துக்கு வெளிப்புற சுவரில் கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஓவியங்கள், பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நல்லாசிரியர் இளங்கோவனின் கண்டிப்பும், கடின உழைப்பும் எங்கள் பகுதி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மண்டியிட்டு வணங்கி படிக்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கீழ்பெரும்பாக்கத்தைச்சேர்ந்த 56 வயதான த.பாலு. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பாலு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை நல்வழிப்படுத்துவதோடு அவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதாவது பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது, மாலையில் பள்ளி முடிந்த பிறகும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மேலும் சரியாக படிக்காத மாணவர்களையும், தலைமுடியை அதிகமாக வளர்த்தல் உள்ளிட்ட பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு நற்பண்புகளை போதிக்கும் வகையில் அந்த மாணவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் பாலு, மண்டியிட்டு தனது இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு சிறந்த முறையில் படிக்கச் சொல்வதோடு வருங்காலத்தில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று நன்னெறிகளை பின்பற்றி வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறார்.


அதோடு ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்கள் யார், யார் என கண்டறிந்து மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களுடைய பெற்றோருடன் அமர்ந்து பேசி எதற்காக உங்களது மகன் பள்ளிக்கு வரவில்லை, மனரீதியாக ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறானா? என கேட்டறிந்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுரை கூறி வருகிறார். தலைமை ஆசிரியரின் இந்த செயல்கள் அனைத்து மாணவர்களிடத்திலும் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியிலும் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தனது ஆசிரியர் பணி பற்றி தலைமை ஆசிரியர் பாலுவிடம் பேசுகையில், அவர் நம்மிடம் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழைகள். முதல் தலைமுறை மாணவர்கள். ஏழைகளின் கடைசி புகழிடமே அரசு பள்ளிகள்தான். மாணவர்களுக்கு பேரூக்கம், பேருழைப்பு, மிகுந்த ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இந்த ஐந்தும் இருக்க வேண்டும். இவை இருந்தாலே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம்.

தமிழ்வழிக்கல்வி, வாழ்க்கையில் உயர்வதற்கு ஒரு தடையில்லை என்று நம்பிக்கையோடு படிக்க வேண்டும். மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்விடக்கூடாது.

ஆசிரியர்களை பொறுத்தவரை, மாணவர்களின் நிலைக்கு இறங்கி வந்து அளவற்ற பொறுமையுடன் பாடங்களை சிறு, சிறு கருத்துக்களாக பிரித்து கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடத்தில் நட்புடன் பழக வேண்டும். வளர்ந்த பிள்ளைகளை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, அன்பு வழியில் மட்டுமே திருத்த முடியும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டாலே ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்லதொரு இணக்கம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story