நாளை டெல்லி செல்கிறேன் நான் அரசியல் அனுபவத்தில் இளையவன் கிடையாது காங்கிரஸ் புதிய தலைவர் தினேஷ் குண்டுராவ் பேட்டி


நாளை டெல்லி செல்கிறேன் நான் அரசியல் அனுபவத்தில் இளையவன் கிடையாது காங்கிரஸ் புதிய தலைவர் தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 6:37 PM GMT)

நாளை நான் டெல்லி செல்கிறேன், நான் அரசியல் அனுபவத்தில் இளையவன் கிடையாது என்று காங்கிரஸ் புதிய தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

நாளை நான் டெல்லி செல்கிறேன், நான் அரசியல் அனுபவத்தில் இளையவன் கிடையாது என்று காங்கிரஸ் புதிய தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சுற்றுப்பயணம் செய்தேன்

கூட்டணி ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதற்கு நாங்கள் வாய்ப்பு வழங்க மாட்டோம். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க தேவையான ஒத்துழைப்பை காங்கிரஸ் வழங்கும். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும். இல்லாவிட்டால் அதற்கு முன்பே வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது.

கட்சி தலைவர் பதவியை தாருங்கள் என்று நான் தலைமையிடம் கேட்கவில்லை. இதற்கு முன்பு மந்திரியாக பணியாற்றினேன். அப்போது மந்திரி பதவியில் இருந்து நீக்கிவிட்டு எனக்கு செயல் தலைவர் பதவியை கொடுத்தனர். அதை ஏற்று சிறப்பான முறையில் கட்சி பணியாற்றினேன். நான் முன்பு இளைஞர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றினேன். அப்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன்.

இளைவயனாக இருக்கலாம்

மாநிலத்தில் கட்சி நிர்வாகிகள் எனக்கு நன்றாக தெரியும். வயதில் நான் இளையவனாக இருக்கலாம். ஆனால் கட்சி மற்றும் அரசியல் அனுபவத்தில் நான் இளையவன் கிடையாது. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கு எந்த பதவியை கொடுத்தாலும் அதை ஏற்று பணியாற்ற தயார் என்று நான் கூறினேன். அதன்படி கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு கிடைத்துள்ளது. கட்சியை பலப்படுத்த நான் தீவிரமாக பாடுபடுவேன்.

காங்கிரசை பொறுத்த வரைக்கும் சாதி பலத்தை பார்த்து பதவி வழங்குவது இல்லை. அவ்வாறு சாதியை பார்த்து இருந்தால் சாதி பலம் இல்லாத வீரப்பமொய்லி போன்றவர்கள் முதல்–மந்திரி ஆகி இருக்க முடியாது. எனக்கும் அதே நிலை தான், சாதி பலத்தை பார்த்து கட்சி தலைவர் பதவியை எனக்கு கட்சி மேலிடம் வழங்கவில்லை. தற்போது மந்திரியாக நியமிக்கப்பட்டவர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும்.

டெல்லி செல்கிறேன்

சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. அத்துடன் முதல்–மந்திரி குமாரசாமி சில புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். 10–ந் தேதி(அதாவது நாளை) டெல்லி செல்கிறேன். அங்கு கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிப்பேன். 11–ந் தேதி நான் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு ஏற்கிறேன்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.


Next Story