கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்றால் நடவடிக்கை போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்றால் நடவடிக்கை போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 7:41 PM GMT)

கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

துறையூர்,

துறையூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் கூடிய பார்களில் திருச்சி மாவட்ட மது விலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். கீரம்பூர், சொரத்தூர், காளிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் போலி முத்திரை வைக்கப்பட்டுள்ளதா? என்று அதற்கான கருவியை கொண்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து பார்களில் விற்கப்படும் சிக்கன், மட்டன் மற்றும் தின்பண்டங்களின் தரத்தையும் ஆய்வு மேற்கொண்ட அவர், அவற்றில் ஈக்கள் மொய்ப்பதை பார்த்து சுகாதாரமான முறையில் விற்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் அவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும், அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்றாலோ, கடை திறப்பதற்கு முன்னதாக மதுவிற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து 10581 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

ஆய்வின்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், துறையூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story