கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்க பாதைக்கு இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்க பாதைக்கு இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 9 July 2018 7:16 PM GMT)

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கபாதை அமைத்து ஒரு மாதமாகியும் அதற்கான இணைப்பு சாலை உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ரெயில்வே கேட் உள்ளது. இது, கும்மிடிப்பூண்டி சிப்காட், பாலகிருஷ்ணாபுரம், புதுகும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளையும், 30–க்கும் மேற்பட்ட கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரெயில்வே கேட் ஆகும்.

ரெயில்வே நிர்வாகத்திற்கு ஏற்படும் நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு இந்த ரெயில்வே கேட் பல வருடங்களுக்கு முன்பே நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. இருப்பினும் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனம் மூலமும், நடந்தும் மறுபுறம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பல்வேறு காலதாமதங்களுக்கு இடையே இந்த ரெயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த மாதம், இரவும் பகலுமாய் நடைபெற்றது. இந்த சுரங்கபாதை பணி முடிவடைந்து தற்போது ஒரு மாதமாகியும் சுரங்கபாதைக்கான இருபுறமும் இணைப்பு சாலையை அமைத்து போக்குவரத்துக்கு ஏற்ப அந்த சுரங்கபாதை வழியை சீரமைக்கும் பணி மட்டும் நடைபெறவில்லை.

ஏற்கனவே கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்வது இல்லை. தற்போது ரெயில்வே கேட்டை கடந்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலைக்கு சென்று சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அதே போல வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் சாலையில் மட்டுமே நிறுத்தப்படுவதால், அனைத்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் மேற்கண்ட ரெயில்வே கேட்டை கடந்துதான் கும்மிடிப்பூண்டிக்கும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தின் காரணமாக இது இன்றியமையாத வழியாக உள்ளது.

தற்போது ரெயில்வே கேட்டின் கீழ் ரெயில்வே துறை சார்பாக சுரங்கபாதை அமைக்கப்பட்ட நிலையில் அதனை முழுமையான போக்குவரத்துக்கு ஏற்ப வழி செய்யாத காரணத்தால் அவ்வழியே நடந்து சென்று மறுபுறத்தை கடப்பதிலும் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல இயலாத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

ரெயில்வே சுரங்கபாதை அமைப்பதற்கு முன்பு கூட மூடப்பட்ட கேட்டை கடந்து சென்ற பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து மிக எளிதாக இருந்தது. தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையே சுரங்கபாதை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் அதனை போக்குவரத்துக்கு ஏற்ப சீரமைக்காத செயல் கும்மிடிப்பூண்டி மக்களை முடக்கி போட்டு உள்ளது.

எனவே சுரங்கபாதையின் இருபுறமும் உரிய இணைப்புசாலையை காலதாமமின்றி அமைத்து அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்திற்கு ரெயில்வே நிர்வாகம் வழி செய்திட வேண்டும் என்பதே கும்மிடிப்பூண்டி மக்களின் தற்போதைய இன்றியமையாத கோரிக்கையாக உள்ளது.


Next Story