50 புதிய தாலுகாக்கள் விரைவில் செயல்பட தொடங்கும் - மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்


50 புதிய தாலுகாக்கள் விரைவில் செயல்பட தொடங்கும் - மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 7:31 PM GMT)

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 50 புதிய தாலுகாக்கள் விரைவில் செயல்பட தொடங்கும் என்று சட்ட சபையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜனதா உறுப்பினர்கள் சுனில்குமார், ஹாலப்பா உள்பட பல உறுப்பினர்கள் எழுந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 50 புதிய தாலுகாக்கள் எப்போது பணிகளை தொடங்கும் என்று கேள்வி கேட்டனர். அதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதிலளிக்கையில் கூறியதாவது:-

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 50 புதிய தாலுகாக்கள் விரைவில் செயல்பட தொடங்கும். அந்த தாலுகாக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கு தேவையான நிதி குறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து, அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இயற்கை பேரிடர் மீட்பு படையை கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

குடகு மாவட்டமும் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவையான அளவுக்கு மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது. இது மட்டுமின்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.95 ஆயிரமும், 15 சதவீதம் முதல் 75 சதவீதத்திற்குள் சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.75 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும். இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Next Story