மராட்டியத்தில் தொழில் முதலீடு குறைந்ததற்கு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததே காரணம் - அசோக் சவான் குற்றச்சாட்டு


மராட்டியத்தில் தொழில் முதலீடு குறைந்ததற்கு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததே காரணம் - அசோக் சவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2018 11:13 PM GMT (Updated: 11 July 2018 11:13 PM GMT)

தொழில் முதலீடு குறைந்ததற்கு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததே காரணம் என காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் குற்றம் சாட்டியுள்ளாார்.

மும்பை,

இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் மராட்டிய மாநிலம் கடந்த ஆண்டுகளை விட பின்தங்கி 13-ம் இடத்தை பிடித்தது.

இந்த பிரச்சினையை முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் (காங்கிரஸ்) சட்டசபையில் எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு இந்த தகவல் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் டெல்லிக்கு தொடர்பு கொண்டு பட்டியலில் ஏதேனும் தவறு நேர்ந்ததா என விசாரித்தேன். அவர்கள் உண்மைதான் மராட்டியம் 13-வது இடத்தை பிடித்துள்ளது. ஆந்திராவும், தெலுங்கானாவும் முதல் 2 இடத்தை பிடித்திருக்கிறது, என்றனர்.

நம் மாநிலம் முதலீட்டில் பின் தங்குவது மிகவும் கவலைக்குறிய விஷயம், இதனால் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடும். இதுகுறித்து மாநில அரசு பதிலளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இது குறித்து பேசியதாவது:-

முதலீடுகளை ஈர்ப்பதில் நம்மை விட பின்தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலம்(4-வது இடம்) தற்போது நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது. இதற்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே நிலவும் மட்டமான ஒருங்கிணைப்பே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “தற்போதைய பா.ஜனதா, சிவசேனா கட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதால், முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க தயங்குகின்றனர்” என்றார்.

Next Story