விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்


விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 July 2018 11:33 PM GMT (Updated: 12 July 2018 12:17 AM GMT)

மும்பைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் சார்ஜாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த வெளிநாட்டு பெண்கள் இருவர் மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து சென்றபோது, பீப் சத்தம் எழுப்பியது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கவரித்துறை அதிகாரிகள் அந்த பெண்கள் இருவரையும் பெண் அதிகாரிகள் உதவியுடன் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வெளிநாட்டு பெண்கள் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சூடான் நாட்டை சேர்ந்த நாடா ஓமெர், மனால் ஓமெர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதேபோல துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக ஹசிப் அத்துருப் என்பவரும், அவருக்காக விமான நிலையத்தின் வெளியே தங்கத்தை வாங்குவதற்காக காத்து கொண்டிருந்த சேக் இர்பான் என்பவரும் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். இந்தநிலையில், துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தின் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

மேற்படி சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 7 லட்சம் ஆகும்.

Next Story