ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 July 2018 11:15 PM GMT (Updated: 12 July 2018 10:01 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து நேற்று வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 53,657 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் நேற்று பிலிகுண்டுலுவில் தண்ணீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று இரவு தண்ணீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது. பரிசல்கள் இயக்கப்படாமல் ஆற்றங்கரையோர பகுதிகளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்காகவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் ஆர்வமாக வந்தோம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தோம். ஆனாலும் ஒகேனக்கல்லில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி வெள்ளத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். காவிரி ஆற்றின் அழகை ரசித்தோம். முதலைப்பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து மகிழ்ந்தோம்.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் கூறினர். 

Next Story