சேலம் அருகே, ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்


சேலம் அருகே, ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 13 July 2018 11:30 PM GMT (Updated: 13 July 2018 7:02 PM GMT)

சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆடல், பாடலுடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் கிராமத்தில் முத்தானூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1955-ம் ஆண்டில் இந்த பள்ளி கட்டப்பட்டது. முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் குரால்நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தது. இதனால் பன்றிகள், நாய்கள் மற்றும் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து திரிவதை காணமுடிந்தது. அதன்பிறகு பள்ளிக்கு தேவையான கழிவறை, தண்ணீர் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

இதனிடையே, சேலம் குகை பகுதியை சேர்ந்த ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர், குரால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாறுதலாகி வந்தார். அதன்பிறகு பள்ளியில் அதிரடி மாற்றங்கள் உருவானது. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், விளையாட்டு மற்றும் ஆங்கில வழியில் கற்பித்தல் என தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளியை உருவாக்கினார் என்றால் மிகையாகாது. இதனால் ஆரம்பத்தில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்துவந்த நிலையில் தற்போது 127 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஒரு பாடத்தை பாடல்கள் மூலம் ஆசிரியர்கள் ஆடிப்பாடி குழந்தைகளுக்கு வகுப்புகளை நடத்துகிறார்கள். இதை பின்பற்றி மாணவர்களும் பாடல்களை பாடிக்கொண்டு ஆடுகிறார்கள். ஆடல், பாடலுடன் பாடம் கற்பிக்கும் முறை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர, பள்ளி வளாகத்தில் வேப்பமரம், கற்பூரவள்ளி செடி, காற்றாலை உள்ளிட்ட மரங்கள் வளர்த்து வருவதோடு, மூலிகை தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், எழுத்து தோட்டம் அமைத்து அங்கு ஒவ்வொரு வார்த்தைகளாக உருவாக்கி அதன்மூலமும் மாணவர்களுக்கு புதிய முறையில் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகிறார்கள். இங்கு படித்து முடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் 20 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொண்டு செல்கிறார்கள் என்றும், இந்த பள்ளியில் மதிய வேளையில் புத்தகங்களை படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் புத்தகங்களை தெரிந்துகொண்டு செல்வதாகவும் ஆசிரியர் தெய்வநாயகம் தெரிவித்தார்.

குரால்நத்தம் கிராமத்தில் ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு பட்டதாரி மாணவர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது நிறைய பட்டதாரி மாணவர்கள் உருவாகி வருவதாகவும் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். தற்போது மாணவ-மாணவிகளின் நலன் கருதி கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், கல்வி கற்கும் முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியில் பாடங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து வருவதால் குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தநிலையில், குரால்நத்தம் கிராமத்தை சுற்றியுள்ள கட்டியப்பன் புதூர், விநாயகாநகர், கட்ட புளியமரம், முத்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலி, சேர், புத்தகங்களை அடுக்கும் அலமாரிகள் ஆகியவற்றை டிராக்டர் மூலம் மேளதாளங்களுடன் சீர்வரிசையை எடுத்துவந்து ஆசிரியர்களிடம் கொடுத்தனர். அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு விழா நடத்தியும் பெருமைப்படுத்தினர்.

குரால்நத்தத்தில் அரசு தொடக்கப்பள்ளியாக செயல்படும் இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்களை கட்டி கொடுத்து 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தவேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story