காவிரியில் நீர் திறக்கப்பட உள்ளதால் நெரூர் ராஜவாய்க்காலை புனரமைக்க வேண்டும் விவசாயிகள் மனு


காவிரியில் நீர் திறக்கப்பட உள்ளதால் நெரூர் ராஜவாய்க்காலை புனரமைக்க வேண்டும் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 16 July 2018 10:45 PM GMT (Updated: 16 July 2018 8:04 PM GMT)

காவிரியில் நீர் திறக்கப்பட உள்ளதால் நெரூர் ராஜவாய்க்காலை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் பாடப்பிரிவில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், வேளாண் பாடப்பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் மாறுதலாகி நீண்ட நாட்களாகியும் மாற்று ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இடைதேர்வு, காலாண்டுதேர்வு நெருங்கிவருவதால் அந்த குறிப்பிட்ட பாடம் மட்டும் நடத்தப்படாமல் இருக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி வேளாண் பாடப்பிரிவிற்கு விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, உடனே அரசு ஜீப் மூலம் அந்த மாணவர்களை பள்ளிக்கு மீண்டும் அனுப்பிவைத்தார்.

புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு பசுமை வீடு கட்ட ஆணைப்பிறப்பித்து முதல் கட்ட தொகையாக ரூ.45 ஆயிரம் வழங்கினர். இதை வைத்து கொண்டு வீட்டின் ஆரம்ப பணிகளைசெய்தோம். இந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் அடுத்த கட்ட நிதியை தராததால் வீடு கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பசுவை வீடு கட்ட நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

உப்பிடமங்கலம் கீழ்பாகம் புகையிலைகுறிச்சியானூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அரசு சார்பில் எங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து போய் உள்ளன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் அதனை சீரமைத்து தர வேண்டும். எங்கள் பகுதியிலுள்ள குண்டும்- குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். பொதுசுகாதார வளாகம் கட்டி தர வேண்டும். ஊரின் பொதுக்கிணற்றுக்கு கம்பிவலை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா ஆண்டிபாளையம் கிராமம், பாலராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவ- மாணவிகளை அழைத்து வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதி குழந்தைகள் அங்குள்ள ஆதிதிராவிடர் பிரைமரி பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு சென்று வருகிற நடைபாதையில் சிலர் முட்களை வெட்டி போட்டுள்ளதால், 1½ கிலோ மீட்டர் சுற்றி கொண்டு பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது. எனவே பள்ளிக்கு செல்லும் வழியிலுள்ள நடைபாதையை சுத்தம் செய்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நெரூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருமலை, செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், நெரூர் ராஜவாய்க்கால் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் செடிகள் முளைத்தும், இரு கரைகளிலும் தென்னை- பனைமர மட்டைகள் விழுந்து கிடக்கின்றன. சில இடங்களில் வாய்க்காலில் மணல் மூட்டைகளை போட்டு பாதை போன்று அமைத்துள்ளதால் அந்த பகுதி சேதமாகி உள்ளது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகமாக வருகிறது. அது திறக்கப்பட உள்ளதால் அதற்கு முன்னர் ராஜவாய்க்காலில் புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் தங்கவேல், நகர செயலாளர் காந்தி உள்ளிட்டோர் திரண்டு வந்து அளித்த மனுவில், கரூர்- சேலம் சாலை வெங்கமேடு பகுதியில் உள்ள மையதடுப்பு சுவரின் காரணமாக அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன. சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மைய தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். மேலும் அப்பகுதியில் சாலையோரமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லைஅரசு உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக துப்புரவு பணியாளர்களுக்கு என தனியாக குறைதீர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கரூர் அரசு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். திருமாநிலையூர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியிலுள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் காவிரியில் மணல் கொள்ளையை தடுத்திடு என கோஷமிட்டபடியே வந்து மனு கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், ஆதிதிராவிட நல அதிகாரி பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story