இளையான்குடி பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்


இளையான்குடி பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 6:55 PM GMT)

இளையான்குடி பகுதியில் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சமூக விரோதிகள் உடைத்து விட்டதால் குடிநீர் வீணாகி அருகில் உள்ள கண்மாய்க்கு செல்கிறது.

இளையான்குடி,


இளையான்குடி நகர் சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த நகரில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இது தவிர இந்த நகரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இளையான்குடியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு இளையான்குடி நகருக்கு வந்து செல்வது வழக்கம். பொதுவாக இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் விவசாயம் மழையை நம்பித்தான் இருக்கும். மேலும் இந்த பகுதியில் விவசாயம் தவிர ஊடு பயிராக மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிடுவது வழக்கம்.


கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கடும் வறட்சி காரணமாக இந்த பகுதியில் விவசாயம் இல்லாமல் பொய்த்து போனது. இன்னும் சில இடங்களில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவமழை நன்கு தரை குளிர பெய்தால் மட்டுமே இந்த பகுதியில் விவசாயம் நன்கு செழித்து வளரும்.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு திருச்சியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு தீர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக திருச்சியில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு அவை திருப்பத்தூர், சிவகங்கை, இளையான்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு செல்கிறது. இந்த திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாய்களை கடந்த சில மாதங்களாக சமூக விரோதிகள் ஆங்காங்கே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் காவிரி குடிநீர் வீணாகி அருகில் உள்ள கண்மாய்களுக்கு செல்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள வாணி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சில சமூகவிரோதிகள் உடைத்து விட்டு சென்றனர்.


இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாய்க்காலில் காவிரி குடிநீர் பெருக்கெடுத்து ஓடி பல லட்சம் லிட்டர் குடிநீர் அருகில் உள்ள கண்மாயில் பெருகி வருகிறது. இதனால் இளையான்குடி மற்றும் பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும் இதுபோன்று செயல் செய்யும் சமூகவிரோதிகளை போலீசார் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story