அருப்புக்கோட்டைக்கு செய்யாத்துரை மகனை சென்னையில் இருந்து அழைத்து வந்து விசாரணை


அருப்புக்கோட்டைக்கு செய்யாத்துரை மகனை சென்னையில் இருந்து அழைத்து வந்து விசாரணை
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 7:07 PM GMT)

பிரபல காண்டிராக்டர் செய்யாத்துரையின் மகன் நாகராஜை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் வசிக்கும் பிரபல காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகங்களில் நேற்று 4-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு சோதனையில் கிடைத்த புதிய ஆதாரம், ஆவணங்கள் பற்றி செய்யாத்துரை மற்றும் அவரது ஆடிட்டரிடம் மாலை வரை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். மேலும் செய்யாத்துரை மகன் கருப்பசாமியை அழைத்து சென்று வங்கி லாக்கரில் உள்ள ஆவணங்கள், தங்க நகைகளை ஆய்வு செய்து வங்கி லாக்கரை சீல் வைத்தனர்.

அதிகாரிகளின் விசாரணையின் போது செய்யாத்துரையிடம் இருந்து தமக்கு பதில் தெரியாது என்றும் மற்ற விவரங்கள்சென்னையில் வசிக்கும் மற்றொரு மகன் நாகராஜுக்கு மட்டும் தான் தெரியும் என கூறி முடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் நாகராஜை நேற்று மாலை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வருமான வரித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் ஜெயராகவன் மற்றும் 5 அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த தொடர் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story