புதுக்கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை


புதுக்கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை
x
தினத்தந்தி 20 July 2018 10:45 PM GMT (Updated: 20 July 2018 8:25 PM GMT)

புதுக்கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை தாய்மார்களுக்கு வழங்கினார்.

புதுக்கோட்டை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். புதுக்கோட்டையில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வந்தார். திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை ரோஜா இல்லத்திற்கு வருகை தந்த அவரை, கலெக்டர் கணேஷ், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கு போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கவர்னர், ரோஜா இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். முதலில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் தூய்மை உறுதிமொழியினை ஆங்கிலத்தில் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பஸ் நிலையத்தின் எதிரே உள்ள சந்து பகுதிக்கு சென்று தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த குப்பைகளை அகற்றினார்.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது, அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை வழங்கினார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் அறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து புதுக்கோட்டை நரிமேட்டில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,920 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மீண்டும் ரோஜா இல்லத்திற்கு திரும்பினார்.

பின்னர் அங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்த தொகுப்பினை பார்வையிட்டு, அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, ஆறுமுகம் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்கள், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோரிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 128 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் காந்தி பேரவை நிறுவனர் தினகரன், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கவர்னிடம் மனு கொடுத்தார். பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் ராமசேதுபதி புதுக்கோட்டைக்கு தனியாக பாராளுமன்ற தொகுதி வேண்டும் என மனு கொடுத்தார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள், கவர்னரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது கவர்னரை சந்திக்க நேரமானதால் அதிகாரிகளுக்கும், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியினர் மணல் கடத்தல் தொடர்பாக கவர்னரிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரி மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு சென்றார்.

புதுக்கோட்டைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்த வந்தததையொட்டி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உள்பட 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 785 பேரையும் போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். நேற்று இரவு 9 மணி வரை யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. வக்கீல்கள் அணியை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தனியார் அமைப்பின் ஆண்டு விழா திருச்சி சங்கம் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘’திருச்சி மாநகரத்தின் மலைக்கோட்டை, மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் கோவில் ஆகியவை கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் கலாசாரம், பண்பாடு என்பது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நம் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க உயர்ந்த கலாசாரமானது தலைமுறை, தலைமுறையாக பரவி கொண்டிருக்கிறது.நேர்மை, வெளிப்படத்தன்மை, சுயநலமற்ற சேவை, கூட்டுபக்தி, அர்ப்பணிப்பு போன்றவை நாட்டின் தேசப்பற்றில் முக்கியமானதாகும். தேசப்பற்று இருந்தால் தான் நாடு முன்னேற்றமடைய முடியும். தேசப்பற்று இல்லாத எந்த நாடும் முன்னேறாது” என்றார்.

Next Story