அரை பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை


அரை பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2018 10:15 PM GMT (Updated: 21 July 2018 9:00 PM GMT)

வலங்கைமான் அருகே அரை பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த உத்தமதானபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி சரோஜா(வயது 65). சுந்தரம் இறந்து விட்டதால் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் சரோஜா வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வயலுக்கு சரோஜா உளுந்து பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவருடைய மகள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வயலில் சரோஜா பிணமாக கிடந்தார். மேலும் அவரது காதில் அணிந்திருந்த அரை பவுன் கம்மலும் திருடப்பட்டு இருந்தது. இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரோஜா காதில் அணிந்திருந்த கம்மலுக்காக யாரோ அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கம்மலை திருடி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story