குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை போலீசார் விசாரணை


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2018 10:15 PM GMT (Updated: 21 July 2018 10:10 PM GMT)

தளி அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள நாகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி நித்யா (வயது 27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த நித்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story