மரத்தில் வேன் மோதி விபத்து: ஆத்தூரை சேர்ந்த தாய், மகன்கள் உள்பட 4 பேர் பலி


மரத்தில் வேன் மோதி விபத்து: ஆத்தூரை சேர்ந்த தாய், மகன்கள் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 24 July 2018 10:30 PM GMT (Updated: 24 July 2018 9:14 PM GMT)

பெரம்பலூர் அருகே கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் வேன் மோதியதில் ஆத்தூரை சேர்ந்த தாய், மகன்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பலூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் சாத்தனார் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). கார் மெக்கானிக். இவரது மனைவி சுகுணா (46). மகள்கள் காயத்ரி (28) யோகதர்ஷினி (21). சுகுணாவின் தாய் ஜெயரத்தினம் (73), சகோதரர்கள் ராஜா (53), முருகன் (48), உறவினர்கள் ஈரோட்டை சேர்ந்த நடராஜன் (62), மனோஜ்குமார் (20) ஆகிய 8 பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட ஆம்னி வேனில் புறப்பட்டு வந்தனர். பின்னர் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை மனோஜ்குமார் ஓட்டினார். இவர்களுடன் கருப்பையா வரவில்லை. அவர் ஆத்தூரிலேயே இருந்தார்.

சுகுணா குடும்பத்தினர் வந்த வேன் பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை 3.50 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது மனோஜ்குமார் தூக்க கலக்கத்தில் இருந்ததால் எதிர்பாராதவிதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் வேனில் இருந்த ராஜா, முருகன், ஜெயரத்தினம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் காயத்ரி, யோகதர்ஷினி, சுகுணா, நடராஜன் மனோஜ்குமார் ஆகிய 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர்.

அப்போது விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள அந்த கோவிலில் ஒருவர் காரை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார். வேன் விபத்துக்குள்ளான சத்தத்தை கேட்டு விழித்த அவர் அக்கம்பக்கத்தினரை எழுப்பி விபத்தில் சிக்கியவர்களை மீட்டதுடன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மீட்பு படையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த காயத்ரி உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராஜா, முருகன், ஜெயரத்தினம் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்தவர்களில் யோகதர்ஷினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சுகுணா, காயத்ரி, மனோஜ்குமார் ஆகிய 3பேரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அவர்களது உறவினர் ஒருவர் என 4 பேர் பலியான சம்பவம் ஆத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story