சிகிச்சையின் போது ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான நோயாளி பிணமாக மீட்பு


சிகிச்சையின் போது ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான நோயாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 25 July 2018 10:44 PM GMT (Updated: 25 July 2018 10:44 PM GMT)

சிகிச்சையின் போது ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி பிணமாக மீட்கப்பட்டார்.

மும்பை,

மும்பை தாராவியை சேர்ந்த முதியவர் இஷான் சேக்(வயது60). இவர் கடந்த 22-ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை சென்ட்ரலில் உள்ள நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு நடத்திய பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், சம்பவத்தன்று தன்னை ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வந்த தனது மகன் மருந்து வாங்க வெளியில் சென்றிருந்த நேரத்தில் இஷான் சேக் திடீரென மாயமானார்.

இதனால் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது, ஆஸ்பத்திரியின் பழைய கேண்டீன் அருகே இஷான் சேக் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர். உடனே அவரை மீட்டு பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்து போனது தெரியவந்தது. இது பற்றி அக்ரிபாடா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story