நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்ற புதுச்சேரி சட்டசபை மீண்டும் 30-ந் தேதி கூடுகிறது


நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்ற புதுச்சேரி சட்டசபை மீண்டும் 30-ந் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 26 July 2018 12:15 AM GMT (Updated: 25 July 2018 11:35 PM GMT)

புதுவை சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள்முதல் பிரச்சினைகளுக்கு இடையே சிக்கி தவித்து வருகிறது.

புதுச்சேரி,

கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, அரசு ஊழியர்கள் சம்பளம் என 4 மாதங்களுக்கு சட்டசபையில் அப்போது ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. அன்றைய தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த கூட்டத்தில் மார்ச் மாதம் நடந்த கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் திடீரென்று சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் சட்டசபையில் கடந்த 2-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினை எழுந்தது. இந்தநிலையில் சட்டசபை கூட்டம் கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதி ஒதுக்க மசோதாவை தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்தது. அதாவது கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் இந்த மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதனால் அரசு ஊழியர் களுக்கு இம்மாத (ஜூலை) சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இந்த மசோதாவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். இதற்கிடையே புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கும் விதமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றனர். அங்கு மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தினர்.

இந்தநிலையில் நிதி ஒதுக்க மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் வகையில் புதுவை சட்டசபை வருகிற 30-ந்தேதி மீண்டும் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடியின் நிபந்தனையின்படி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதிக்கமாட்டார் என்றே தெரிகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்களின் ஆலோசனைகளை சபாநாயகர் வைத்திலிங்கம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாதங்களில் இறுதி தேதியில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர் களுக்கு 4 மாதத்துக்கான சம்பளம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு இருந்தது. இந்த மாதத்துக்கான (ஜூலை) சம்பளம் வழங்குவது என்றால் மீண்டும் சட்டசபையில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். இந்த மசோதா நிறைவேற்றப்படும் சூழ்நிலையில் 30-ந்தேதிக்கு பிறகே சம்பள பட்டியல் தயாரிக்கப்படும். அதன்பிறகே கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டியது உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இந்த மாதம் சம்பளம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும் சூழ்நிலையே தற்போது இருந்து வருகிறது.

Next Story