காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பு


காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 July 2018 11:00 PM GMT (Updated: 28 July 2018 7:48 PM GMT)

காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 24-ந் தேதி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை நீர்வரத்து குறைந்ததால் உடனடியாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக கரைபுரண்டு ஓடிய தண்ணீர் வற்றி மணல் திட்டுகள் தெரிய தொடங்கின.

ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட காவிரி நீர், லால்குடி வழியாக அரியலூர் சென்று கடலூர் மாவட்டம் வீராணம் கீழணைக்கு சென்றது. இதனால், அம்மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நேரத்தில் தண்ணீர் வந்ததாக மலர்தூவி ஆர்ப்பரித்தனர். ஆனால் அதன்பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கல்லணைக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 67,600 கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர், திருச்சி முக்கொம்புக்கு 64,157 கன அடியாக வந்து கொண்டிருந்தது. எனவே, முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று வினாடிக்கு 37,533 கனஅடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மீண்டும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 25,774 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு சென்று அங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதேவேளையில் திருச்சியில் கோரையாறு ஆற்றுப்பாசன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான காட்டுப்புத்தூர் வாய்க்கால், அய்யன் பெருவளை வாய்க்கால், புதுவாத்தலை வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய அய்யன் வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்பட 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் பாசன வசதி பெறுவதுடன், நீர்மட்டமும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிவரும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் தொடர்ந்து திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story