தேசிய நெடுஞ்சாலையில் 24 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் - போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தகவல்


தேசிய நெடுஞ்சாலையில் 24 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் - போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தகவல்
x
தினத்தந்தி 28 July 2018 10:30 PM GMT (Updated: 28 July 2018 9:11 PM GMT)

தேசிய நெடுஞ்சாலையில் 24 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறினார்.

வேலூர்,

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட எல்லைக்குள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதேபோன்று வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றது. விபத்துகளை குறைக்க வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. இதன்மூலம் விபத்துகள் குறைந்துள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக விபத்துகள் குறைந்துள்ளது. குறிப்பாக காவேரிப்பாக்கம், ஓச்சேரி சந்திப்புகளில் ஆண்டுக்கு 350-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றது. அவை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் விபத்துகள் குறைந்துள்ளது. தற்போது 50 சதவீத விபத்துகள் குறைந்துவிட்டது. மேலும் விரிஞ்சிபுரம், காட்பாடி, சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாதபோதும் இந்த கேமராக்களில் வீடியோ பதிவாகவில்லை என்றாலும் அதில் உள்ள மெமரிகார்டு மூலம் புகைப்படம் பதிவாகும். இரவு நேரத்திலும் படம் துல்லியமாக தெரியும். எனவே நெடுஞ்சாலைகளில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.

அதேபோன்று தற்போது தேசிய நெடுஞ்சாலையில் 24 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் சிக்னல்கள் அமைக்கப்படும். இதனால் விபத்துகள் முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story