சுதந்திர தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


சுதந்திர தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 31 July 2018 10:45 PM GMT (Updated: 31 July 2018 7:30 PM GMT)

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ- மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திற்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும், உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்களை கூடுதலாக இயக்கிட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story