தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்ப்பாசனத்துறையை உருவாக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்


தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்ப்பாசனத்துறையை உருவாக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2018 10:45 PM GMT (Updated: 31 July 2018 8:02 PM GMT)

தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்ப்பாசனத்துறையை உருவாக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

நீடாமங்கலம்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு முதல் தூர்வாருவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, அதற்காக பயன்படுத்தப்படவில்லை. தூர்வாரும் பணிகளை அரசியல் தலையீடு காரணமாக மேற்கொள்ளவில்லை. அதற்காக அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? என தெரியவில்லை.

2017-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி மூலமாக ஆறு, வாய்க்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமலேயே பணிகளை முடித்ததாக கணக்கு காட்டி உள்ளனர். நடப்பு ஆண்டில் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்தில் தொடங்கப்படவில்லை.

மேட்டூர் அணை திறப்புக்கு பின்னர் தூர்வாரும் பணிகளை தொடங்கி அங்கொன்றும், இங்கொன்றுமாக அவசர கோலத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட பாசன கொள்ளளவு தண்ணீர் விடுவிக்கப்பட்டாலும் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடலில் தண்ணீர் வீணாக கலக்கிறது.

ஆறுகளில் உள்ள மதகுகள் மற்றும் ஷட்டர்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் தெற்குராஜன், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால்களில் இதுநாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழக அரசு வனத்துறைக்கு உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்ப்பாசனத்துறையை உருவாக்க வேண்டும். இல்லையேல் அரசியல் தலையீட்டால் தமிழக நீர்ப்பாசனம் அழிந்து விடும். இந்த பாதிப்புகள் குறித்தும், கர்நாடக மாநில அரசு ராசிமணலில் அணை கட்டுவது குறித்தும் விவாதிப்பதற்காக மூத்த பொறியாளர்கள், ஆய்வாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் செந்தில்குமார், நிரஞ்சன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story