தீ விபத்து: அ.தி.மு.க. அலுவலகம் எரிந்து நாசம் போலீசார் விசாரணை


தீ விபத்து: அ.தி.மு.க. அலுவலகம் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 July 2018 10:45 PM GMT (Updated: 31 July 2018 8:20 PM GMT)

பூம்புகார் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சைக்கிள் கடை மற்றும் அ.தி.மு.க. அலுவலகம் எரிந்து நாசமாகின. இதனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவெண்காடு,

பூம்புகார் அருகே தருமகுளம் கடைத்தெருவில் பாலசுப்பிரமணியன் (வயது 50) என்பவர் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், அ.தி.மு.க. பொறுப்பாளராகவும், பூம்புகார் பால் கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார். இவர் தனது கடையையொட்டி கட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பாலசுப்பிரமணியனின் சைக்கிள் கடை மற்றும் கட்சி அலுவலகம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் சைக்கிள் கடை மற்றும் கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும், கடை மற்றும் கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து சம்பவம் தற்செயலாக நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story