சாலையோரம் பதுக்கி வைத்திருந்த 1,100 லிட்டர் மண்எண்ணெய், 9 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்


சாலையோரம் பதுக்கி வைத்திருந்த 1,100 லிட்டர் மண்எண்ணெய், 9 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2018 11:00 PM GMT (Updated: 1 Aug 2018 3:15 PM GMT)

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சாலையோரம் பதுக்கி வைத்திருந்த 1,100 லிட்டர் மண்எண்ணெய், 9 கியாஸ் சிலிண்டர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரமாக மறைவான இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டனர். அந்த இடத்தை சோதனை செய்த போது, வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 9 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலிண்டர்களில் அனைத்தும் காலியாக இருந்தன.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, அதை உரிமை கொண்டாட யாரும் வரவில்லை. இதையடுத்து கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல், பறக்கும் படை அதிகாரிகள் இரவிபுதூர்கடை– கல்லுப்பாலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குளத்தின் அருகே புதர்களுக்கிடையில் நீலநிற கேன்கள் தெரிந்தன. உடனே அதிகாரிகள் அந்த இடத்தில் சென்று சோதனை செய்தபோது 30 கேன்களில் சுமார் 1,100 லிட்டர் வெள்ளை நிற மானிய மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெயை பறிமுதல் செய்து இனயம் அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story