‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம்


‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 Aug 2018 11:30 PM GMT (Updated: 4 Aug 2018 7:10 PM GMT)

‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து புனிதாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

கோவை,

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் கோவை ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலரங்கநாதபுரத்தில் தர்‌ஷனா என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு தங்கியிருந்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி அந்த விடுதியின் வார்டனான தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) மீது புகார் கூறப்பட்டது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி வார்டன் புனிதா ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த வார்டன் புனிதா கடந்த 1–ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

புனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். அதன்பேரில் புனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க 2 நாட்கள் அனுமதித்து நேற்று முன்தினம் மாலை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனிதாவை பீளமேடு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. போலீசில் புனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

விடுதி வார்டன் புனிதா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி அழைத்தது இதுதான் முதல் முறை என்றும் இதற்கு முன்பு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் ரூ.20 ஆயிரம் பணம் தான் இருந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெகநாதன் இறந்ததை புனிதா செய்தித்தாள் மற்றும் டெலிவி‌ஷனை பார்த்துத் தான் தெரிந்துகொண்டதாக கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார். சரண் அடைவதற்கு முன்பு புனிதா சென்னையில் தான் தலைமறைவாக இருந்துள்ளார். ஜெகநாதன் இறந்த பின்னர் இனி போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என்பதால் கோர்ட்டில் சரண் அடைந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் ஜெகநாதன் மற்றும் புனிதாவை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். என்றாலும் ஜெகநாதன் மரணம் குறித்தும்,புனிதா தலைமறைவாக இருக்க உதவியவர்கள் பற்றியும்,இந்த விவகாரத்தின் பின்னணி பற்றியும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

போலீஸ் காவல் முடிந்து புனிதாவை நேற்றுமாலை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 14–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து புனிதாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story