மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்


மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:45 PM GMT (Updated: 5 Aug 2018 8:56 PM GMT)

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை வென்றது.

புதுக்கோட்டை,

ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 44-வது ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

போட்டியில் சென்னை, மதுரை, நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரைபிள் கிளப் வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இதில் டபுள் டிராப் போட்டிகள், ஸ்கீத் போட்டிகள், சிங்கிள் டிராப் போட்டிகள் நடைபெற்றன.

மாநில அளவிலான இந்த போட்டிகளில் சிங்கிள் டிராப், ஸ்கீத் பிரிவு ஆகிய 2 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதேபோல் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது. டபுள் டிராப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று கோவை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மேலும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சிங்கிள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு சுழற்கோப்பையையும், ஸ்கீத் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டி.டி.அப்பாராவ் சுழற்கோப்பையையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றதற்கு புதுக்கோட்டை மகாராஜா சுழற்கோப்பையையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

இதனை ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி உள்ளிட்ட சக அணி வீரர், வீராங்கனைகள் இணைந்து பெற்றுக்கொண்டனர். இதில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி, தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் ரவிகிருஷ்ணன், தேசிய ரைபிள் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், கர்நாடகா துப்பாக்கி சுடும் கழகத்தின் செயலாளர் சுஷில், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story