அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன அமைச்சர் தகவல்


அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:15 PM GMT (Updated: 5 Aug 2018 9:43 PM GMT)

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தாய்பால் வார விழா ஊர்வலம், தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு தூய்மை ரத ஊர்வலம் நேற்று கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையிலிருந்து புறப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கும்பகோணம் தாசில்தார் வெங்கடாச்சலம், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு, பூங்குழலி, அ.தி.மு.க. நகர செயலாளர் ராம.ராமநாதன், ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன், அரிமா சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்கொள்முதல் செய்யப்படும் இடங்களில் சாக்கு பாற்றக்குறை என்பது கடந்த 4 தினங்களுக்கு முன்பு இருந்தது. தற்போது அரசு அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது சாக்கு பாற்றக்குறை என்பது கிடையாது. காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடைமடை வரை தண்ணீர் சென்று விட்ட நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைவாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி ஆற்றில் மூழ்கி மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு, அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல் கூறினார்.

கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் நடந்த தீ விபத்தில் சின்னத்துரை என்பவரின் கூரை வீடும், ராஜேந்திரன் என்பவருடைய வீட்டு முகப்பு கொட்டகையும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரின் குடும்பத்தினரையும் அமைச்சர் துரைக்கண்ணு நேரில் சந்தித்து ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் தீயணைப்பு வண்டியில் தண்ணீர் நிரப்ப தாமதமாகிறது. எனவே சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவருடன் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ஆறுதல் கூறினர்.

Next Story