திருட்டு வழக்குகளில் வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை கரூர் கோர்ட்டு தீர்ப்பு


திருட்டு வழக்குகளில் வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை கரூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 7:34 PM GMT)

திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கருப்பத்தூரை சேர்ந்தவர் சங்கர் என்கிற வெட்டு சங்கர் (வயது 28). இவர் கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் கரூர் நகர் மற்றும் பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் இல்லாத வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருடுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டார். இவர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் திருட்டு தொடர்பான 8 வழக்குகளிலும் இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது போலீசார் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி மோகனவள்ளி விசாரணை நடத்தினார்.

இந்த வழக்குகளில் விசாரணை நிறைவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப் பட்டது. அதில், சங்கர் மீது சுமத்தப்பட்ட 9 திருட்டு வழக்குகளும் ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது. எனவே ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் சங்கரை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேரில் அழைத்து பாராட்டினார். திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்ற சங்கர் பி.பி.ஏ. முடித்து விட்டு எம்.பி.ஏ. கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். அப்போது தான் போலீசார் அவரை துரிதமாக கண்காணித்து பிடித்து கைது செய்தனர். 

Next Story