தஞ்சை அருகே காயத்துடன் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை


தஞ்சை அருகே காயத்துடன் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 9:39 PM GMT)

தஞ்சை அருகே காயத்துடன் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது40). இவர் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள ஸ்வீட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர், வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் வேலை முடிந்து வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நாகப்புடையான்பட்டி கிராமத்தில் சாலையோரம் தலையில் காயத்துடன் சரவணன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சரவணனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story