2 குழந்தைகளை கொன்று பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


2 குழந்தைகளை கொன்று பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 9:47 PM GMT)

2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் எஸ்.எல்.பி. தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). இவருடைய மனைவி சரண்யா (32). இவர்களுக்கு ரிப்கா (4) என்ற மகளும், ஐசக் ஆபிரகாம் (2) என்ற மகனும் இருந்தனர். அருணாசலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரண்யா தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சரண்யா மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே சரண்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் அருணாசலத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

மேலும் அருணாசலத்துக்கும், சரண்யாவுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story