மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Aug 2018 12:40 AM GMT (Updated: 8 Aug 2018 12:40 AM GMT)

திருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தலைவர் ராஜா, செயலாளர் ஜோன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில், 50–க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் கே.எஸ்கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன வியாபாரிகள், ஆலோசகர்கள் உள்ளனர். எங்கள் தொழில் சார்ந்த வாகன பழுது பார்ப்பவர்கள், பெயிண்டர்கள், டூவிலர் மெக்கானிக் போன்ற அனைத்து தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசிடம் இருந்து எவ்வித சலுகைகளும் கிடைக்காத நிலையில் சுய தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கக்கூடிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இந்த மசோதாவை தடுத்து நிறுத்திட வேண்டும்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எங்கள் சங்கங்களால் நடத்தப்படும் பொது போராட்டங்களில் எங்கள் சங்கமும் பங்கேற்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story