முன்விரோதத்தில் வாலிபர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு தீர்ப்பு


முன்விரோதத்தில் வாலிபர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 10:30 PM GMT)

முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குந்தாப்புரா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கார்விகே பகுதியை சேர்ந்தவர் பிரமோத் குமார்(வயது 22). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் பிரமோத் குமார், அதேப்பகுதியை சேர்ந்த ஜீவன்ராவ், அர்பர்ட்குமார், வில்பர்ட், ரோஷன் ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி கடையில் இருந்த பிரமோத் குமாரிடம், ஜீவன்ராவ் உள்பட 4 பேரும் முன்விரோதம் காரணமாக தகராறு செய்தனர். மேலும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, அவருடைய உடலை குளத்திலும் வீசினார்கள். இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஜீவன்ராவ் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது குந்தாப்புரா கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நீதிபதி பிரகாஷ் கண்டேரி தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஜீவன்ராவ், அர்பர்ட்குமார், வில்பர்ட், ரோஷன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். 

Next Story