குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 2–வது நாளாக தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 2–வது நாளாக தடை
x
தினத்தந்தி 9 Aug 2018 9:30 PM GMT (Updated: 9 Aug 2018 2:14 PM GMT)

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2–வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2–வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றால சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியில் சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய நாள் முதல் இதுவரை அனைத்து அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர்.

இந்த நிலையில் நேற்றும் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் நேற்று 2–வது நாளாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் புலியருவி, சிற்றருவிகளில் குளித்து சென்றனர்.


Next Story