நாகை: சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு


நாகை: சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:15 PM GMT (Updated: 10 Aug 2018 7:02 PM GMT)

நாகை அருகே சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் நடத்தி ஒரு மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த பாப்பா கோவில் சமத்துவபுரத்தில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் பல்வேறு தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்தது. மேலும் சாராயம் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தணப்பேட்டை வெட்டுக்குளம் மேல்கரை படித்துறையில் அந்த பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மார்க்ஸ் (வயது28), கலியப் பெருமாள் மகன் மணிகண்டன் (30), செல்லத்துரை மகன் சுரேஷ் (25) பன்னீர்செல்வம் மகன் சிவா (27), சக்கரவர்த்தி மகன் பாலா (18) ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் 5 பேரையும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த சிலர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 5 பேரும் காயம் அடைந்தனர். மார்க்கசின்மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சாராய மூட்டைகளைஎடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாராயம் விற்பனை செய்வதை தட்டிக்கேட்டதற்காக மார்க்ஸ், மணிகண்டன், சுரேஷ், சிவா, பாலா ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாலிதீன் கவரால் கட்டிவைக்கப் பட்டிருந்த சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story