மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் எச்சரிக்கை


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 11:15 PM GMT (Updated: 10 Aug 2018 8:05 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் பெயது வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் வசிக்கம் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

காவிரி தண்ணீர் பாயும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களிலும் பொதுமக்கள் குளித்தல், நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், செல்பி எடுத்தல் மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலை அருகாமையில் குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். தண்ணீர் திறந்துவிடப்படும் கனஅடி அளவு குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா, ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை, போலீஸ்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story