தொடர் கனமழை: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


தொடர் கனமழை: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:59 PM GMT (Updated: 10 Aug 2018 11:59 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மைசூரு,

கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிணகன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களிலும் பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணையும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் கடந்த மாதம் 19-ந்தேதி நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நேற்று முன்தினம் மீண்டும் 2-வது தடவையாக நிரம்பின.

குறிப்பாக கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதே வேளையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை முதல் மேலும் அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது.

கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 15 குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மாதப்பூர் கிராமத்தில் உள்ள பாலத்தையும், நஞ்சன்கூடு தாலுகா பந்தவாலு கிராமத்தில் உள்ள பாலத்தையும் மூழ்கடித்த படி செல்கிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நஞ்சன்கூடு தாலுகா மல்லனமூலே கிராமத்தில் செல்லும் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

உடனே நஞ்சன்கூடு அருகே கடகோலாவில் மைசூருவில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்களும், ஊட்டியில் இருந்து மைசூரு வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரு-ஊட்டி சாலையில் தண்ணீர் பாய்ந்தோடியதால், சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி, அந்த தண்ணீரில் கழுவி சென்றதை காண முடிந்தது.

வெள்ளப்பெருக்கு காரணமாக கபிலா ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல 2-வது நாளாக நேற்றும் கபினி நீர்ப்பாசனத் துறையினரும், வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

அதுபோல் குடகில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 47,709 கனஅடியாக இருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 63,223 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124 அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து செல்கிறது.

இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் மலவள்ளி அருகே உள்ள ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் 2-வது நாளாக நேற்றும் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கபிலா, காவிரி ஆறுகள் டி.நரசிப்புரா அருகே திரிவேணி சங்கமத்தில் சங்கமிக்கிறது. தற்போது கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், திரிவேணி சங்கமம் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63,223 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி வீதம் நீர் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story