ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 8:16 PM GMT)

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெருப்பூர் முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏரியூர்,

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 18 படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் 18 படிகளுக்கும் பால், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 18 படிகளிலும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் முருகன், அர்ச்சகர் செல்வமுத்து குமாரசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரில் முத்தையன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தரையில் படுத்து கொள்ள முத்தையன் சாமியை எடுத்து வந்தவர்கள் அவர் களை தாண்டி சென்றனர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளான நாகமரை, ராமகொண்டஅள்ளி, செல்லமுடி, பூச்சூர், ஏரியூர், மூங்கில் மடுவு, பென்னாகரம் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பூச்சூர் சென்றாய பெருமாள் சாமி கோவில், ராமகொண்டஅள்ளி அக்குமாரி அம்மன் கோவில், வத்தலாபுரம் தர்மசாஸ்தா கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

Next Story