மாயனூர் கதவணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி கரையோர வயல்கள்-வீடுகளில் புகுந்தது


மாயனூர் கதவணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி கரையோர வயல்கள்-வீடுகளில் புகுந்தது
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 8:34 PM GMT)

மாயனூர் கதவணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரங்களில் உள்ள வயல்கள்-வீடுகளில் புகுந்தது.

கிருஷ்ணராயபுரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அங்குள்ள உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனையடுத்து கடந்த மாதம் காவிரி் டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு படிப்படியாககுறைந்ததால், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், மாயனூர் கதவணைக்கு வந்த நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடிக்கு கீழே சென்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்துவரும் கன மழையால் கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரி்த்து நேற்றுமுன்தினம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அங்கிருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த தண்ணீர் கரூர் மாவட்டம் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணையை வந்தடைந்தது. இங்கிருந்து 1,610 கனஅடி நீர் பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டது. கதவணையில் தேங்கியுள்ள தண்ணீரை காண ஏராளமான பொதுமக்கள் நேற்று வந்து பார்த்து சென்றனர். இவர்கள் ஆர்வ மிகுதியால் ஆற்றில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமையில் கிருஷ்ணராயபுரம் பொறுப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் எச்சரி்க்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கதவணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி கரையோர கிராமங்களான மேலமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, சோள வயல்களில் புகுந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல தவுட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள வீரமணி உள்பட பலரது வீட்டிலும், அங்குள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. அதையடுத்து மண்மங்கலம் தாசில்தார் கற்பகம் நொய்யல், சேமங்கி, தவுட்டுப்பாளையம், புகழூர் உள்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு கரையோரம் வசிக்கும் பொதுமக்களிடம் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், குழந்தைகளை காவிரி கரையில் விளையாட விட வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை செய்தார்.

குளித்தலை கடம்பந்துறையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை பொதுமக்கள் கண்டுகளித்தனர். 

Next Story