சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் - கலெக்டர் ராமன்


சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் - கலெக்டர் ராமன்
x
தினத்தந்தி 12 Aug 2018 11:30 PM GMT (Updated: 12 Aug 2018 9:50 PM GMT)

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டுக்கான கிராமசபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் 15-ந் தேதி (புதன்கிழமை) சுதந்திர தினத்தன்று பகல் 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து ஊராட்சி தனி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், அந்தியோதயா இயக்கம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளை அகற்றுவதன் மூலம் சுகாதார மேம்பாட்டை உறுதி செய்தல், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிப்பது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளின் விபரம் மற்றும் 2018-19-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு, செலவு திட்டம், 2018-19-ம் ஆண்டு முதல் - அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து இறுதிப்பட்டியல் ஒப்புதல் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

அதேபோன்று பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011-ம் ஆண்டில் விடுபட்ட தகுதிவாய்ந்த பயனாளிகள் பெயர்களை பட்டியலில் பதிவு செய்து ஒப்புதல் பெறுதல், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், பொது வினியோக திட்டத்தின் கீழ் நியாய விலை அங்காடிகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல், ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் நடைபெறும் சத்துணவு திட்டத்தின் செயலாக்கத்தினை வைத்து தீர்மானம் இயற்றுதல், ஊராட்சி மன்ற தனி அலுவலரால் கொண்டு வரப்படும் இதர பொருட்கள் குறித்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


Next Story