சமூக வலைத்தளங்களில் பெண்களும்.. மோதல்களும்..


சமூக வலைத்தளங்களில் பெண்களும்.. மோதல்களும்..
x
தினத்தந்தி 19 Aug 2018 11:36 AM GMT (Updated: 19 Aug 2018 11:36 AM GMT)

இளைய தலைமுறையினரை தற்போது ஆட்டுவித்துக் கொண்டிருப்பது செல்பி மோகம்.

வகுப்பறை, பயணம், அலுவலகம், சுற்றுலா என எங்கு நோக்கினும் யாராவது ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் தங்கள் பயணம் உள்ளிட்ட தங்களது செயல்களை செல்பி எடுத்து மற்றவர்களுக்கு அறிவிக்கும் இந்த செயல், செல்பி எடுக்கும்போது அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாகவே உள்ளது.

குறிப்பாக நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சுற்றுலா சென்றிருக்கையில் செல்பி எடுக்கிறேன் என்கிற பெயரில் தனியாக சுற்றித்திரிவது உடன் வந்தவர்களை வருத்தமடையச் செய்யும். மேலும் ஒரு பிரேமில் தனித்து இருக்க விரும்புவதால் நட்புகளை விட்டும் தனித்து செல்ல வேண்டியதாகிறது. செல்பிகளால் பலர் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார்கள். அழகாக செல்பி எடுக்கிறேன் என்று ஆபத்தான இடங்களில் கவனமின்றி செயல்பட்டு உயிரை இழந்தவர்களும் நிறைய இருக் கிறார்கள்.

சோஷியல் மீடியா என்பது நீங்கள் ஒருவர் மட்டும் புழங்கும் இடம் அல்ல. அங்கு கோடான கோடி மக்கள் தங்கள் பொழுதை கழிக்கின்றனர். எனவே சமூக வலைத்தளத்தை பொறுத்தவரை உங்கள் செயல் களின் மீது தனிகவனம் செலுத்துங்கள். நீங்கள் பகிரும் விஷயங்கள் பிறர் மனதை புண்படுத்துவதாகவோ அல்லது வன் முறையை தூண்டுவதாகவோ இருத்தல் கூடாது. சமூகம் சார்ந்த விஷயங்களை பகிரும்போது உங்கள் கோணத்தில் சரியாகத் தெரிவது பிறரது கோணத்தில் தவறாக தோன்றலாம். அதனால் நீங்கள் பகிரும் விஷயங்கள் எந்த ஒரு பின்விளைவையும் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு எங்காவது நீண்ட நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு வெளி கதவை பூட்டி, சாவியை அண்டை வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். ‘தினசரி அந்திசாயும்போது விளக்குபோட்டு காலை விடிந்ததும் விளக்கினை அணைத்து விடுங்கள்’ என்றும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள் என்றும் கூறி தன் வீட்டினை அண்டை வீட்டாரை நம்பி ஒப் படைத்துவிட்டு செல்வார்கள். ஆனால் இப்பொழுது எங்கு செல்கிறோம், எப்போது திரும்பி வருவோம் என்று முழு விவரங் களையும் வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கும், அவர்களது உைடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. இது நமக்கு நாமே ஆபத்தை உருவாக்கி கொள்வதாய் அமைந்து விடுகிறது.

சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் பல லட்சம் மக்களை சென்றடைகிறது. அதனால் அதை சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பகிர்வதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். மேலும் ஒருவர் போஸ்ட் செய்திருக்கும் தகவலை ஷேர் செய்வதற்கு முன்னால் அந்த சம்பவம் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு ஷேர் செய்யுங்கள்.

ஒருவர் தனது சிறுவயது மகன் காணாமல் போனதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பின் அவரது மகன் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டான். அவன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்க, சிலர் அவனை அடையாளம் கண்டு மீண்டும் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். இப்படி அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அதனால் நடந்து முடிந்த விஷயங்களை ‘அப்டூ டேட்’ செய்து கொள்ள வேண்டும். அந்த சம்பவம் நடந்த காலத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற போட்டோக்களை பதிவிடாதீர்கள். அதுபோல் கவர்ச்சி, ஆபாசம் நிறைந்த போட்டோக்களையும் பதிவிட்டுவிட வேண்டாம். ஏனெனில் இன்று சமூக வலைத்தளங்களில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலாவருகின்றனர். அதனால் சமூகத்தை நினைத்துப்பார்த்து எதையும் பதிவிடுங்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துரீதியாக மோதிக்கொள்வதை பார்க்கலாம். ஒருவர் பகிரும் ஒரு பதிவு பலருக்கு விவாதப்பொருளாகி விடுகிறது. அது போன்ற சண்டைகளை காண்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் உளவியல் ரீதியாக பிறரை வேதனைக்குள்ளாக்கும். எனவே சண்டை, வன் முறைகளை தூண்டும் விஷயங்களை பகிராமலும், அது போன்ற விஷயங்களில் பங்கெடுக்காமலும் இருங்கள். இது உங்களுக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும்.

சமூக வலைத்தளங்களில் பெண் களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான விஷயம். அதனால் அவர்கள் தங்கள் போட்டோக்களையும், உறவுப் பெண்களின் போட்டோக்களையும் பதிவிடக்கூடாது. முன்பின் அறிமுகமில்லாதவருடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு பெண்களின் பாதுகாப்பிற்கே ஊறுவிளைவித்துவிடும்.

சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளும் முறை

முகநூல் உபயோகிப்பவர்கள் முன்பின் அறிமுகமில்லாதவருடன் வரம்போடு தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும். அவர்களையும் வரம்பு மீற அனுமதித்துவிடக் கூடாது.

வலைத்தளத்தில் நீங்கள் பதிவிடும் பதிவுகளை வைத்தே உங்களின் மனநிலையை பிறர் கணித்துவிடக்கூடும். எனவே உங்கள் பதிவுகளின் மீது கவனம் செலுத்தி உங்கள் பலவீனம் வெளியா காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சுயவிவரங்களை ஆயிரக்கணக்கான மக்கள் உலவும் வலைத்தளத்தில் தெரிவித்து உங்கள் தனிமைக்குள் அடுத்தவர் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள்.

சைபர் கிரைம் குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் தகவல்களின் பாதுகாப்பு என்பது சமூக வலைத்தளங்களினால் கேள்விக்குறியாகி விட்டது என்பதை எப்பொழுதும் கவனத்தில் வைத்திடுங்கள்.

சில இளம்பெண்கள் ‘லைக்’குகளை குவிப்பதற்காக அரைகுறை ஆடைகளில் வீடியோக்களில் தோன்றுகின்றனர். இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றதாகும்.

சமூகவலைத்தளங்களில் உலவும் பெண்கள் தங்கள் பாதுகாப்பே முதன்மையானது என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே உங்களை பிரச்சினைகளில் சிக்காமல் விழிப்புடன் வைத்திருக்கும்.

உங்களது பொருளாதார நிலை, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள், உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளத்தில் ஒருபோதும் பதிவிடக்கூடாது.

தினமும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் அதில் செலவிடுங்கள். அதிக நேரத்தை செலவிட்டு அதற்கு அடிமையாகிவிடாதீர்கள். 

Next Story