குமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை 2 அமைச்சர்கள் பார்வையிட்டனர்


குமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை 2 அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 19 Aug 2018 11:00 PM GMT (Updated: 19 Aug 2018 8:08 PM GMT)

குமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ பார்வையிட்டனர். அப்போது மக்கள் திரண்டு வந்து குறைகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு வீடுகளும் இடிந்தன. மேலும் மின் கம்பங்களும் சாய்ந்தன. வயல்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நெற்பயிர்கள் நாசமானது. வெள்ளத்தால் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

பின்னர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, குமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அணைகளில் நீர் இருப்பு விவரம், வெள்ள பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய விவரம், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடம் தெரிவித்தனர். இந்த அனைத்து தகவல்களையும் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ சேகரித்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட புறப்பட்டனர்.

அந்த வகையில் முதலில் நித்திரவிளை பள்ளிக்கல்லுக்கு சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பள்ளிக்கல் மற்றும் மாமுகம் ஆகிய ஊர்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்ய வந்ததை தொடர்ந்து மக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை அடுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் ஊருக்குள் வராத வகையில் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமாகி விட்டன. எனவே அவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்தனர். அப்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

இந்த குறைகளை கேட்டறிந்த அமைச்சர் உதயகுமார், பொது மக்களிடம், ‘ஊருக்குள் வெள்ளம் புகாதபடி தடுப்பு சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளப்பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும்‘ என்றார்.

அதன்பிறகு அமைச்சர்கள் உதயகுமாரும், கடம்பூர் ராஜூவும் அதிகாரிகளுடன் குழித்துறைக்கு சென்றனர். அங்கு வெள்ளம் புகுந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அதோடு முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்தனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்பட்டுள்ளதா? என்று கேட்டனர். பின்னர் குழித்துறை தாமிரபரணி ஆற்றை பார்வையிட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்பாத்து பாலத்தை மூழ்கடித்த படி தண்ணீர் சென்றது. மேலும் ஊருக்குள் புகுந்த தண்ணீர் வடிந்தோடியதைத் தொடர்ந்து சப்பாத்து பாலத்தை ஒட்டியுள்ள பகுதி சகதி மயமாக காட்சி அளித்தது. இதனை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதன் பிறகு பேச்சிப்பாறை அணைக்கு சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணைகளில் தண்ணீர் சரியான அளவு இருக்கிறதா? அதிக நீர்வரத்தால் அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா? என்றெல்லாம் கேட்டறிந்தனர். அணையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் பகுதிகளையும், ஷட்டர்களையும் பார்வையிட்டனர். இதனையடுத்து பெருஞ்சாணி, புத்தன் அணை, குற்றியாணி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Next Story