போதிய கூட்டம் இல்லாததால் காரைக்குடி– பட்டுக்கோட்டை பயணிகள் ரெயில் தற்காலிக நிறுத்தம்


போதிய கூட்டம் இல்லாததால் காரைக்குடி– பட்டுக்கோட்டை பயணிகள் ரெயில் தற்காலிக நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Aug 2018 10:00 PM GMT (Updated: 19 Aug 2018 10:06 PM GMT)

காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே சென்று வந்த பயணிகள் ரெயிலில் போதிய கூட்டம் இல்லாததால் ஒரு மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி

காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே சுமார் 73கிலோ மீட்டர் தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 30ந்தேதி முதல் அதில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியிடமாக இருந்ததால் அந்த ரெயில் ஒரு நாள் இயக்கத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரெயிலை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கையை அடுத்த இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 2ந்தேதி முதல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ரெயில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2தினங்கள் மட்டும் இயக்கப்பட்டது. காரைக்குடி–பட்டுக்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் 35ரெயில்வே கேட் இருந்த போதிலும், அதில் 5இடங்களில் மட்டும் தான் கேட் கீப்பர் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்கள் அருகே ரெயில் செல்லும் போது அந்த ரெயில் கேட்டிற்கு முன்பே ரெயிலை நிறுத்தி விட்டு அந்த ரெயிலில் பின் பெட்டில் வரும் கேங்மேன்கள் இறங்கி வந்து அந்த கேட்டை மூடிய பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் இந்த ரெயிலின் பயணம் நேரம் 6மணி நேரத்திற்கும் மேல் அதிகரித்தது.

பொதுவாக பஸ்சில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றால் 3மணி நேரத்திற்கு முன்பு சென்று விடலாம். ஆனால் இந்த பயணிகள் ரெயிலில் 6மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் பெரும்பாலான பயணிகள் இந்த ரெயிலை தவிர்த்து வந்தனர். இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்து வந்தது. இதையடுத்து இந்த ரெயில் மூலம் ரெயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ரெயிலை ஒரு மாதம் காலமாக வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி நிறுத்தி வைத்துள்ளதாக தென்னக ரெயில்வே துறையினர் அறிவித்தனர். மேலும் இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை இதுநாள் வரை ரெயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர காரைக்குடியில் இருந்து நேரடியாக மதுரைக்கு புதிய ரெயில்வே பாதை அமைக்க வேண்டும் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்தவித அரசியல் முக்கிய பிரமுகர்களோ, தென்னக ரெயில்வே அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை என்பது மற்றொரு தகவலாகும்.


Next Story