சேத்தியாத்தோப்பு, ஊ.மங்கலத்தில் விபத்து பெண் உள்பட 2 பேர் பலி


சேத்தியாத்தோப்பு, ஊ.மங்கலத்தில் விபத்து பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2018 10:43 PM GMT (Updated: 19 Aug 2018 10:43 PM GMT)

சேத்தியாத்தோப்பு, ஊ.மங்கலத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

சேத்தியாத்தோப்பு, 



கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரும், இவருடைய மனைவி பதர்நிஷாவும்(வயது 42), கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கும்பகோணத்துக்கு புறப்பட்டனர். சேத்தியாத்தோப்பு கடை வீதியில் சென்றபோது குறுக்கே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. உடனே ஜாகீர்உசேன் பிரேக் போட்டார்.

இதில் நிலைதடுமாறிய ஜாகீர்உசேன் இடதுபுறத்தில் விழுந்தார். பதர்நிஷா இடதுபுற சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் சக்கரம் பதர்நிஷாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து சென்று பதர்நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள்(78). இவர் நேற்று முன்தினம் ஊ.மங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மந்தாரக்குப்பத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கலியபெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story