நாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் கணவன்- மனைவி தற்கொலை


நாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் கணவன்- மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 7:21 PM GMT)

நாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி செய்த கணவன்- மனைவி நாக்பூர் ரெயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் கைது செய்ய முயன்ற போது சயனைடு தின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வாசன் (வயது 44). இவர் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (48), அவருடைய மனைவி சிவசெல்வி. இவர்கள் குமரி மாவட்டம் மருங்கூரில் வசித்து வந்தனர். 2 பேரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய, நான் ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்தேன். அவர்கள் கூறியதுபோல லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

அதாவது ராஜ்குமார், அவருடைய மனைவி ஆகிய இருவரும் வாசனிடம் மோசடி செய்தது போல் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்களிடம் ரூ.1½ கோடி பணம் மோசடி செய்துள்ளனர். உடனே போலீசார் ராஜ்குமார், அவருடைய மனைவி ஆகிய இருவரும் மீதும் பணம் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். அதற்குள்ளாக கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாயினர்.

அவர்களை பிடிக்க சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ராஜ்குமாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு அவர்கள் இல்லை. இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் எந்த பகுதியில் சிக்னல் காட்டுகிறது என்று பார்த்தனர்.

ராஜ்குமார் செல்போன் எண், மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் அதுவும் ரெயில்வே தண்டவாள பகுதியில் சிக்னல் காட்டியது. இதுகுறித்து நாக்பூர் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும் மோசடி தம்பதியின் புகைப்படத்தையும் நாக்பூர் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பினர். அப்போது மோசடி தம்பதி ரெயிலில் பயணம் செய்தது தெரிய வந்தது.

ராஜ்குமார், அவருடைய மனைவி பற்றிய விவரங்களை சேகரித்து கொண்ட நாக்பூர் போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக இருந்தனர். ராஜ்குமார் பயணம் செய்த ரெயில் வந்ததும் உடனே போலீசார் விரைந்து சென்று ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் ராஜ்குமார், அவருடைய மனைவி சிவசெல்வியும் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெரிய பெரிய பேக்குகளும் வைத்திருந்தனர். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட நாக்பூர் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த பேக்குகளை ஆய்வு செய்தனர். இதுபற்றி குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மோசடி தம்பதியை கைது செய்வதற்காக ரெயிலை விட்டு இறங்கும்படி கூறினர். திடீரென்று அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த ஒன்றை வாயில் போட்டு விழுங்கினர். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக இறந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் டாக்டர்களை வரவழைத்து இருவரது உடல்களையும் சோதனை செய்தனர். இருவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தின்றது சயனைடாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இருவரது உடல்களும் நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவர்களிடம் இருந்த பணம் மற்றும் உடமைகளை போலீசார் கைப்பற்றினர்.

ராஜ்குமார் வைத்திருந்த பேக்குகளில் மோசடி செய்யப்பட்ட பணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இதற்கிடையே குமரி மாவட்ட போலீசார் நாக்பூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் நாகர்கோவில் திரும்பிய பிறகுதான் மோசடி தம்பதி பற்றிய முழு விவரம் தெரிய வரும். போலீசில் சிக்கிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கணவன்-மனைவி இருவரும் ஏற்கனவே முடிவு செய்து இருக்கலாம் என்றும், அதற்காக அவர்கள் சயனைடு வாங்கி வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மோசடி தம்பதி தற்கொலை சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story