பட்சீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்


பட்சீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 9:23 PM GMT)

பட்சீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத சர்வே துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு,

செய்யாறு டவுன் வழூர்பேட்டையில் பட்சீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக வெங்கட்ராயன்பேட்டையில் சுமார் 3.12 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பிரிவினை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அப்போது இருந்தே கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், அறங்காவலர் சார்பிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இருதரப்பினரிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழுவினர் கோர்ட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்தது.

தற்போது விசாரணை முடிவில் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற செய்யாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து உத்தரவின் நகலுடன் கோவில் அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் மேகலா, ராஜா, ரவிகணேசன் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பதற்றமான சூழ்நிலையில் கோர்ட்டு உத்தரவை காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட சர்வே துறையினரிடம் வழங்கியும் எவ்வித துரித நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிலர் செய்யாறு - வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் எச்சரிக்கை விடுத்தும் மறியலை கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து வி.ஜி.பாபு உள்பட 32 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ள நேரத்தில் நிலத்தை அளக்காமல் சர்வே துறையினர் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டதாகவும், கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் மீறுவதாகவும் கோர்ட்டு ஊழியர்கள் அவர்களை எச்சரிக்கை செய்தனர்.

மேலும் உரிய நேரத்தில் அளக்க முடியவில்லை என்றால் எழுத்துபூர்வமாக அறிக்கையை தரவேண்டும் என கோர்ட்டு ஊழியர்கள் கேட்டனர். இதையடுத்து சர்வே துறையினர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முள்வேலிகள் வளர்ந்துள்ளதால், அதனை அகற்றிவிட்டு பிறகு நிலத்தை அளந்து தருகிறோம் என எழுதி கொடுத்தனர்.

தொடர்ந்து முள்வேலியை அகற்றிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story