போலீஸ் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது


போலீஸ் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2018 11:00 PM GMT (Updated: 21 Aug 2018 10:13 PM GMT)

பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 22). இவர் கடந்த 18-ந் தேதி பேரணாம்பட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு தனது நண்பர் குமரேசன் என்பவருடன் சினிமா பார்க்க சென்னார். அங்கு கேன்டீன் நடத்தி வரும் பூவண்ணன் மகன் அனந்தவாணன் (27) என்பவரிடம் சென்று தகராறு செய்து அவரை தாக்கினர். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இதனையடுத்து 19-ந் தேதி அனந்தவாணன், தனது நண்பர் விஜயகுமாருடன் சேர்ந்து திலீப்குமாரை தாக்கினார். இதனை அறிந்த திலீப்குமாரின் உறவினர்கள் அனன்யா, குமரேசன், பெருமாள் ஆகியோர் சேர்ந்து அனந்தவாணனை தாக்கினர்.

இது குறித்து அனந்தவாணன், திலீப்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியாக பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார். அனன்யாவை விசாரணைக்கு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்தபோது, அவரது உறவினர் சரண்ராஜ் (28) என்பவர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அனன்யாவை கைது செய்தால் நாங்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறி அவர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சரண்ராஜ் கைது செய்யப்பட்டார். மேலும் திலீப்குமார் கொடுத்த புகாரின் பேரில் அனந்தவாணன், விஜயகுமாரும், அனந்தவாணன் கொடுத்த புகாரின் பேரில் திலீப்குமார், அனன்யா, முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story